சென்னை: ‘வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்’ என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம்.
வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறோம். இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்துக்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை என்கிறோம்” என்று கூறியுள்ளார்.
அமித் ஷா பேசியது என்ன? – டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சமஸ்கிருதம். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத்தை முக்கிய தூணாக கொண்ட இந்திய அறிவுமுறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது” என்றது குறிப்பிடத்தக்கது.