சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவேர்களாக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், திட்டப் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் வகையில் நமஸ்தே திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில்,‘‘2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய தூய்மைப் பணியாளர்கள் அமைப்பின் பரிந்துரைப்படி, பயனாளிகளை அடையாளம் காண தலித் இந்திய வர்த்தக சபை நியமிக்கப்பட்டுள்ளது.
மாநில காவல் துறைக்கு எந்த புகாரும் அளிக்காமல் நேரடியாக சிபிஐ வழக்குப்பதிவு செய்யக் கோர முடியாது. திட்டத்தில் 240 ஆவணங்கள் சம்பந்தப்பட்டுள்ளது. அவற்றை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது. தொடர்ந்து, அரசு தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை மே 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.