சென்னை: அரசு, தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த 12 நாட்களாக நீடித்து வருகிறது.
இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, வழக்கறிஞர் வினோத் நேற்று முறையீடு செய்திருந்தார். மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் வினோத், மீண்டும் இன்று இந்த விவகாரம் தொடர்பாக முறையீடு செய்தார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதை போன்ற போலி தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.” என விளக்கமளித்தார்.
அப்போது மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாக பதிவுத் துறை தெரிவித்ததை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, குறைபாடுகளை நிவர்த்தி செய்து மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தினந்தோறும் முறையீடு செய்தால் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது எனவும் எச்சரித்தார்.
சர்ச்சையின் பின்னணி: சென்னை மாநகராட்சியின், 5-வது மற்றும் 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்கான ரூ. 276 கோடிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து, தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்து, தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி அவர்கள் போராடி வருகின்றனர்.
முன்னதாக, சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி நிர்வாகமும். தமிழக அரசும் இன்று பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டது நினைவுகூரத்தக்கது.