சென்னை: நாட்டிலேயே தமிழகத்தில்தான் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்யவில்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, சமூக வலைதளப் பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவு: முதல்வரின் சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூர் சட்டபேரவைத் தொகுதி திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் குப்பன், விஷவாயு தாக்கி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மேலும், உடனிருந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கர், ஹரிஹரன் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மூன்று தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பறிகொடுத்து 10 நாட்கள் கூட ஆகவில்லை. தற்போது முதல்வரின் சொந்தத் தொகுதியில் மீண்டும் ஒரு உயிரைப் பறிகொடுத்திருக்கிறோம். நாட்டிலேயே தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கிறது. திமுக அரசு, தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்யவில்லை. இனியும் இதை விபத்து என்று சொல்வது அர்த்தமற்றது.தூய்மைப் பணியாளர்களைப் கொலை செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்.