சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநகராட்சி மன்ற கூட்டத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா, தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
அப்போது, ரிப்பன் மாளிகை முன்பு, 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக நள்ளிரவில் கைது செய்ததைக் கண்டித்து, திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் 4 பேர், ‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்’ என கோஷம் எழுப்பியவாறு மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துவருவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்த நிலையில், அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, ‘‘சென்னையில் தெரு நாய்களுக்கு தினசரி கருத்தடை செய்யப்பட்டு வருகிறது.
வளர்ப்பு நாய்களை மாநகராட்சியில் பதிவு செய்யவும், தடுப்பூசி போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் ஒரு மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 இனக்கட்டுப்பாடு மையங்கள் செயல்பாட்டுக்கு வரும். அப்போது கருத்தடை செய்யப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார்.
வால்டாக்ஸ் சாலையில் உள்ள புதிய பல்நோக்கு கட்டிடத்தில் 1,248 சதுரஅடியில், 2-வது தளத்தில் ரூ.15,080 மாத வாடகையில், அன்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள் மற்றும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவச கணினி மற்றும் தையல் பயிற்சி வகுப்பு நடத்த மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. டி.பி.சத்திரம் பகுதியில் மாநகராட்சி கட்டிடத்தில் ‘அரண்’ என்ற திருநங்கைகள் தங்கும் இல்லம் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னை மெரினா லூப் சாலையில் ரூ.1.56 கோடியில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்கவும், ஷெனாய் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தை ரூ.5.30 கோடியில் மேம்படுத்தவும், அம்பத்தூர் மண்டலம் கள்ளிகுப்பம், அண்ணாநகர் மண்டலம் வில்லிவாக்கம் ஆகிய பகுதியில் உள்ள மாநகராட்சி இறைச்சிக் கூடங்களை ரூ.5.41 கோடியில் மேம்படுத்தவும் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
மெரினா கடற்கரை, காமராஜர் சாலையை பாரம்பரிய வழித்தடமாக மாற்ற சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது. அதன்படி, மெரினா காமராஜர் சாலையில் 2.3 கி.மீ. நீளத்துக்கு 4 மீட்டர் அகலத்தில் சைக்கிள் பாதை உருவாக்கப்பட உள்ளது. காமராஜர் சாலையின் இருபுறமும் 9 பேருந்து நிறுத்தங்களும், 3 புறக்காவல் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. மேலும், 15 மாநகராட்சி பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் மையங்களை ரூ.1.75 கோடியில் அமைக்கவும், பள்ளி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 1,747 தற்காலிக தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தம் 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.