சென்னை: தீபாவளியை முன்னிட்டு 11 சிறப்பு ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. முக்கிய ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை 1,000 வரை பதிவாகியுள்ளது. எந்தெந்த ரயில்களுக்கு தேவை அதிகமாக உள்ளது என்று ஆய்வு செய்து, அதற்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அந்த வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி உட்பட 11 சிறப்பு ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பரிசீலனைக்கு பிறகு, சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.