சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில், மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் தூய்மை சேவை பிரச்சார நிறைவு நாள் நிகழ்வு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி. மகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருடன் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், கூடுதல் கோட்ட மேலாளர்கள் தேஜ் பிரதாப் சிங், அங்கூர் சவுகான் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர், ரயில்களில் செல்லும்போது எப்படி கவனமாக இருக்க வேண்டும் என நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலமாகவும்,ரயில்களில் மற்ற பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் பி.மகேஷ், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூய்மைப்படுத்தும் பணிகள்: ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மூன்று கட்டங்களாகமேற்கொள்ளப்பட்டன. ஆக.1 முதல் 15-ம் தேதி வரை முதல்கட்டமாக நடைமேடைகள், ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆக.16 முதல் செப்.16-ம் தேதி வரை 2-வது கட்டமாகவும், செப்.17 முதல் அக்.2-ம் தேதி வரை மூன்றாவது கட்டமாகவும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒட்டுமொத்தமாக, இந்த தூய்மைப் பணிகளில் 28,000 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில், மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் தென்மாவட்டம் உட்பட தமிழகத்தில் 50 சதவீதம் சிறப்பு ரயில்களும், பிற மாநிலங்களுக்கு 50 சதவீதம் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. எப்போது இருந்து இயக்கப்பட உள்ளது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.