திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இரு வழித்தடங்கள் சீரமைப்பு பணி நிறைவு பெற்று, விரைவு மற்றும் மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து, இரு என்ஜின்களுடன் கூடிய 52 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று, நேற்று அதிகாலை வாலாஜா சைடிங்கு சென்று கொண்டிருந்தது. 50 டேங்கர்களில் பெட்ரோல், டீசல் நிரப்பி கொண்டு சென்று கொண்டிருந்த அந்த ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக 18 டேங்கர்கள் அடுத்தடுத்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. விபத்தில் டேங்கர்கள் ஒன்றோடு ஒன்று உரசி, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தால் திருவள்ளூர்- அரக்கோணம் மார்க்கத்தில், புறநகர் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில் பாதைகள் என, 4 ரயில் பாதைகளும் மேல்நிலை மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்து, திருவள்ளூர், தேர்வாய் கண்டிகை சிப்காட், ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், 4 பெட்ரோல் டேங்கர்கள், 14 டீசல் டேங்கர்கள் என, அந்த 18 டேங்கர்களும் தீக்கிரையாகின.
விபத்து நடந்த உடனே சென்னை-அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்கள், ஏகாட்டூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன; சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயில்கள், விரைவு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது. தொடர்ந்து, சம்பவ இடம் விரைந்த தெற்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீ விபத்தில் சிக்காத டேங்கர்களை பாதுகாப்பாக சம்பவ இடத்தில் இருந்து, அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து, சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் மேல்நிலை மின் கம்பங்கள், மின் கம்பிகளை சீரமைக்கும் பணி தொடங்கியது. பகல், இரவு என்று பாராமல் தொடர்ந்து நடந்து வரும் அப்பணியில், 4-வது ரயில் பாதை சீரமைப்பு பணி முடிவுக்கு வந்து, நேற்று இரவு விரைவு ரயில் சேவை தொடங்கியது. 3-வது ரயில் பாதை சீரமைப்பு பணி இன்று காலை நிறைவு பெற்று, காலை 7 மணி முதல் புறநகர் மின்சார ரயில்கள் சேவை தொடங்கியது.
விரைவு ரயில் பாதைகளான 1 மற்றும் 2-வது ரயில் பாதைகளில் இருந்த, தீக்கிரையான டேங்கர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அப்பாதைகள் மற்றும் மேல்நிலை மின்கம்பங்கள், மின் கம்பிகள் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதியத்துக்குள் அப்பணி முடிவுக்கு வந்து, விரைவு ரயில் பாதைகளிலும் ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.