புதுடெல்லி: திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை என்றும், கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு பதிலாக கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் கட்டலாம் எனவும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிதியிலிருந்து ரூ.4.54 கோடி மதிப்பீட்டில் உத்தமபாளையத்தில் திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அறநிலையத்துறை விதிகளுக்கு எதிரானது. கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டக்கூடாது. உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்கப் பெருமாள் கோயில் பெயரில் உத்தேசமாக ரூ.400 கோடி நிதி உள்ளது. இந்நிலையில், பழநி கோயில் நிதியை பயன்படுத்தி உத்தமபாளையத்தில் திருமண மண்டபம் கட்ட தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அது தொடர்பான அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், பக்தர்கள் அளிக்கும் காணிக்கை திருமண மண்டபங்களை கட்டுவதற்காக அல்ல. அந்த திருமண மண்டபங்களில் ஆபாச பாடல்களை ஒலிபரப்ப கோயில் நிலம் பயன்பட வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் திருமண மண்டபங்களுக்கு பதிலாக பள்ளி, கல்லூரிகள் என கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் கட்டலாம் என கருத்து தெரிவித்து விசாரணையை நவ.19-க்கு தள்ளி வைத்துள்ளனர்.