திருப்பூர்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அகத்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்கவிடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் தேசியக் கொடி தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர் தாரபுரம் சாலையில் உள்ள லைட்பிளஸ் நியூட்ரா சிட்டிக்கல்ஸ் நிறுவனம், கடந்த சில வாரங்களாக இந்த தேசியக் கொடி தயாரிப்பில் ஈடுபட்டது. இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் விக்னேஷ் கூறும்போது, “அகத்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் 147 அடி உயரம் கொண்ட கம்பத்தில் பறக்க விடுவதற்காக, 20 அடி உயரம் மற்றும் 30 அடி நீளத்தில் தேசியக்கொடி தயார் செய்யப்பட்டது. 25 நாட்களில் தயார் செய்தோம்.
22 கிலோவில் தயாரிக்கப்பட்ட இந்தக் கொடி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் போதிய வெளிச்ச அமைப்புகளுடன் அமைக்கப்படுகிறது. தேசியக்கொடி முறைப்படி தயார் செய்யப்பட்டு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது. கொடிக்கம்பத்தில் நேற்று கொடி ஏற்றப்பட்டது” என்றார்.