மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து உரிய முடிவு எடுக்க தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரியும், ராமலிங்கம் என்பவர் திருப்பரங்குன்றம் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கக் கோரியும், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில், தர்காவை பராமரிக்க அனுமதி வழங்கவும், தர்காவுக்கு செல்லும் வழியில் மின்விளக்கு வசதி செய்யக் கோரியும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில் வக்பு வாரியம், முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ கட்சியினர் உட்பட பலர் சார்பில் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவு: திருப்பரங்குன்றம் மலையில் தர்கா மற்றும் சமணர் கோயில் உள்ளன. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கீழமை நீதிமன்றத்தில் ஏற்கெனவே முடிவு காணப்பட்டுள்ளது. அதில் தலையிட வேண்டியதில்லை. ஆடு, கோழி பலியிடுவது என்பது தர்காவில் மட்டும் அல்ல திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள இந்து கோயில்களிலும் உள்ளது. இதை மாவட்ட ஆட்சியரும் ஒத்துக் கொண்டுள்ளார். இந்தப் பழக்கம் தொடர திருப்பரங்குன்றத்தில் நடந்த அனைத்துத் தரப்பு மக்கள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அமைதி, மத நல்லிணக்கம்: திருப்பரங்குன்றம் மலையை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறை கூறியுள்ளது. மலையைப் பாதுகாக்க வேண்டியது இருந்தாலும் அங்கு நடைபெறும் மத நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டியதில்லை. அதே நேரத்தில் மலையில் புதுப்பித்தல், கட்டுமானம் என எந்தப் பணியாக இருந்தாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். மலையில் மின் இணைப்பு, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்துவதால் மலை பாதிக்கப்படும். மலைப்பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் ஆட்களை அனுமதிப்பதில்லை. இதனால் மின் இணைப்பு தேவையில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி, மத நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும். இதை சீர் குலைக்க நினைக்கும் நபர்கள், அமைப்புகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
நீதிபதி எஸ்.ஸ்ரீ மதி பிறப்பித்த உத்தரவு: திருப்பரங்குன்றம் மலை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றோ சமணர்குன்று என்றோ அழைக்கப்படக்கூடாது. தர்காவில் கந்தூரி விழா நடத்தி ஆடு கோழிகளை பலியிடுவதற்கும், ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமிய புனித நாட்களில் தொழுகை செய்யும் உரிமையை நிலைநாட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுக வேண்டும். அதே நேரத்தில் சந்தனக்கூடு விழாவை நடத்தலாம். காசி விஸ்வநாதர் கோயில் பகுதிக்கு மாலை 6 மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கக் கூடாது.
ஏற்கெனவே மலையில் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள் ளன. இதனால் மலை மேல் மின் வசதி செய்ய வேண்டியதில்லை. சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டால் திருப்பரங்குன்றம் மலை சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே அந்த நிவாரணங்களையும் வழங்க இயலாது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்படு கிறது. அதேபோல் தர்காவுக்கும் தண்ணீர் கொண்டு செல்லலாம்.
தர்காவின் புனரமைப்புப் பணிகளுக்காக தர்காவின் அறங்காவலர் தொல்லியல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று பணிகளைச் செய்யலாம். மத்திய தொல்லியல் துறை, மலை, பாதுகாக்கப்பட்ட பழங்கால சின்னங்களான கோயில் மற்றும் தர்காவின் எல்லைகளைக் குறிக்க ஓராண்டுக்குள் சர்வே செய்து முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருப்பதால் உரிய முடிவெடுக்க தலைமை நீதிபதியின் பரிந்துரைக்கு அனுப் பப்பட்டுள்ளது.