திருமலை: திருப்பதி ஏழுமலையானின் தங்க ரதம் 28 டன் எடையில், 32 அடி உயரம் கொண்டதாகும். ஆண்டுக்கு 3 முறை மட்டுமே பக்தர்கள் இதனைக் காண இயலும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஆண்டாண்டு காலமாக தேர்த் திருவிழாவை வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு பிரம்மோற்சவத்திலும் தேர்த்திருவிழா 8-ம் நாள் காலை பிரம்மாண்டமான முறையில் மாட வீதிகளில் உலா வரும்.அதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் பக்தர்களுக்கு அருள் புரிவது ஐதீகம். ஆனால், இத்துடன் ஒரு வெள்ளி தேரையும் திருப்பதி தேவஸ்தானத்தின் உருவாக்கினர். அந்தத் தேரில் பிரம்மோற்சவ நாட்களில் உற்சவ மூர்த்திகள் 6-ம் நாள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ஆனால், அந்த வெள்ளித் தேரில் அடிக்கடி மராமத்து பணிகள் நடைபெற்றதால், அதனை மாற்ற வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தீர்மானித்தனர். இந்நிலையில், வெள்ளித் தேருக்கு பதிலாக தங்கத் தேரை ஏற்பாடு செய்யவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தங்க ரதத்தை செய்ய தமிழக கைவினை தயாரிப்பு சங்கத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் 18 கைவினை கலைஞர்கள் திருமலைக்கு வந்து, அங்கேயே தங்கி இருந்து தங்கத்தேரை தயாரித்தனர். 28 டன் எடை கொண்ட இந்த தங்கத் தேர் 32 அடி உயரம் உள்ளதாகும். இதில் 2,900 கிலோ செப்பு தகடுக்கு 74 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்டது. இதில் 25,000 கிலோ மரம், 18 அங்குலம் செப்பு தகடுகள் 9 அடுக்குகளாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை தயாரிக்க அப்போது ரூ.24.34கோடி செலவானது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு 2013-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இதே நாளில் காலை 9.05 மணிக்கு இந்த தங்க ரதத்தின் முதல் தேரோட்டம் நடந்தது. இன்றோடு இந்த தங்க ரதம் உருவாக்கப்பட்டு சரியாக 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆண்டுதோறும் இந்த தங்க ரதம் பிரம்மோற்சவம், ரத சப்தமி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 3 நாட்களில் மட்டுமே கோயிலில் வலம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.