மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் யாகசாலையில் தொடங்கி திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜைகளில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ல் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இதுவரை பதில் இல்லை. எனவே திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை, கருவறை, கோபுர விமான பூஜையில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழ் மொழியில் நடைபெறும்,” எனக் கூறப்பட்டது.
இதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் மனுக்களுடன் சேர்த்து ஜூலை 2-ல் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.
கும்பாபிஷேக நேரத்தை மாற்ற மறுப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தை மாற்றக்கோரி சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் கும்பாபிஷேக நேரத்தை முடிவு செய்ய சபரிமலை மேல் சாந்தி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து அந்தக்குழு கூடி ஜூலை 7-ல் காலை 6.15 முதல் 6.50 வரை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. இந்த நேரத்துக்கு குழுவில் இடம் பெற்றிருந்த சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் காலை 6.15 முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த இறுதி முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில், “ஜூலை 7ல் நல்ல முகூர்த்த நேரம் என்பது மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தான். தோஷங்கள் இல்லாத இந்த நேரத்தில் நேரத்தில் கும்பிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்க தடை விதிக்க வேண்டும்,” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “நீதிமன்றம் அமைத்த குழு கும்பாபிஷேக நேரத்தை முடிவு செய்துள்ளது. அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்தலாம். கோயில் கும்பாபிஷேகத்தை பொறுத்தவரை கோயில் விதாயகர் குறிக்கும் நேரம் தான் முக்கியம். இனிவரும் காலங்களில் கோயில் விதாயகர் குறிப்பிடும் நேரத்தை எழுத்துப் பூர்வமாக பெற்று அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்,” என உத்தரவிட்டனர்.