திருச்சி: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சுமார் 6 கி.மீ தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், புத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று திருச்சி வந்தார். பின்னர், துவாக்குடி அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். பின்னர், மாலை 5.30 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டார். டிவிஎஸ் டோல்கேட் சந்திப்பிலிருந்து குட்ஷெட் மேம்பாலம் வரை அரை கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றார். அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து காரில் ஏறி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இறங்கினார்.

நேற்று திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உடன், நடிகர் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோர்.
சிவாஜி சிலை திறப்பு: அங்கிருந்து நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை வரை சுமார் ஒன்றரை கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றார். மீண்டும் காரில் ஏறிய அவர், புத்தூர் அரசு மருத்துவமனை அருகே இறங்கி, அங்கு அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில், நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், பிரபுவின் மகன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜியின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
அதன்பின், அங்கிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் தென்னூர் காவேரி மருத்துவமனை முன்பு இறங்கி, தில்லை நகர் வழியாக கே.டி. சிக்னல் வரை சுமார் ஒன்றரை கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றார். அப்போது, ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இரு புறமும் திரண்டு நின்று முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஏராளமான மக்கள் முதல்வரிடம் மனு அளித்தனர். மேலும் பலர் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். வழிநெடுகிலும் 25-க்கும் அதிகமான இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின், கரூர் பைபாஸ் சாலை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார்.
தொடர்ந்து, இன்று பஞ்சப்பூரில் ரூ.236 கோடி மதிப்பில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து, ரூ.129 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, அதன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையையும் திறந்து வைக்கிறார். அதன் பின்னர், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, அங்கு நடைபெறும் அரசு விழாவில் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் திருச்சி சிவா, அருண் நேரு, மேயர் அன்பழகன், துணை மேயர் ஜி.திவ்யா, எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.