திருச்சி: தவெக தலைவர் விஜய் வரும் 13-ம் தேதி திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், ஓரிரு நாளில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் இறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதே தீவிர பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும், ‘மக்கள் உரிமை மீட்பு நடை பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணியும், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், விக்கிரவாண்டி, மதுரையில் பிரம்மாண்ட மாநாடுகளையும், கோவையில் பூத் கமிட்டி கூட்டத்தையும் நடத்தினார். அவற்றில் லட்சக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து, திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் என சென்டிமென்ட்டாக கருதப்படும் திருச்சியில் வரும் 13-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தவெக மாநில நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: திருச்சியில் வரும் 13-ம் தேதி தொடங்கும் தேர்தல் பிரச்சாரத்துக்காக, நவீன பிரச்சாரப் பேருந்து தயார் நிலையில் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 13, 14-ம் தேதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம். பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச உள்ளார். மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்குவது மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியை தொடர்ந்து கரூர், ஈரோடு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதா அல்லது டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதா என்பது குறித்த ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரண்டொரு நாளில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் இறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். திருச்சியில் தொடங்கும் தேர்தல் பிரச்சாரப் பயணம் தவெகவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.