திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில் திறந்தவெளியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் மற்றும் சேமிப்பு கிடங்கை, 10 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தி மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் உள்ளன. இதில், கரும்பு, நெல் மற்றும் பல்வேறு காய்கறிகள் சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், விவசாயிகள் பெரும்பாலும் நெற் பயிரை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
இவ்வாறு பயிரிடப்படும் நெல் அறுவடைக்கு பிறகு தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் டிபிசி எனப்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகளில் பத்திரப்படுத்தி லாரிகள் மூலம் மொத்த சேமிப்பு கிடங்குக்கு அனுப்பப்படுகிறது.
இதற்காக, கீரப்பாக்கம் பகுதியில்செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையோரம் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இங்கு, மேற்கண்ட ஒன்றியத்தின் கீழ் உள்ள கிராமப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் நெல் சேமித்து வைக்கப்படுகிறது.
பின்னர், லாரி மூலம் நெல் அரவை ஆலைகளுக்கு படிப்படியாக அனுப்பப்படுகிறது. இந்நிலையில், கீரப்பாக்கம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துடன் கூடிய திறந்தவெளியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள், தார்ப்பாய் மூலம் மூடி பாதுகாக்கப்பட்டாலும், பலத்த காற்று மற்றும் கனமழையின் போது மழையில் நனைந்து சேதமடையும் நிலை உள்ளது.
அதனால், மேற்கூரையுடன் கூடிய சேமிப்பு கிடங்காக அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கீரப்பாக்கம் நெல் சேமிப்பு கிடங்கை 10 ஏக்கர் பரப்பளவில் மேற்கூரையுடன் கூடிய சுமார் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்காக அமைக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் திட்டமிட்டது.
இதற்காக, தற்போதுள்ள சிறியளவிலான சேமிப்பு கிடங்கின் அருகில் உள்ள நிலத்தை தேர்வு செய்து, தேவையான நிதி ஒதுக்கீடு கோரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இதுவரையில் அரசின் ஒப்புதல் கிடைக்காமல் உள்ளதால் நிலம் இருந்தும் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க முடியாத நிலை உள்ளது.
அதனால், தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட பகுதியில் சேமிப்பு கிடங்கு அமைக்க ஒப்புதல் தர வேண்டும் என திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கீரப்பாக்கம் சேமிப்பு கிடங்கில் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் நெல்லும் சேமிக்கும் நிலை உள்ளது. தேவையான நில வசதியுடன் உள்ள இந்த சேமிப்பு கிடங்கு மேற்கூரையுடன் விரிவுபடுத்தப்பட்டால், விவசாயிகள் பயன்பெறுவதோடு அரும்பாடு பட்டு அறுவடை செய்யப்படும் நெல் மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருக்கும்.
அதனால், மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதை போன்று, இங்கும் மேற்கூரையுடன் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது: கீரப்பாக்கத்தில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டிய அவசியம் மற்றும் அதற்கான நிலம் மற்றும் மாற்று நிலம் வழங்குவது உட்பட பல்வேறு பணிகளுக்கான கோப்புகள் தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.