‘உடன்பிறப்பே வா’ எனும் நிர்வாகிகள் சந்திப்பு தொடங்கிய நிலையில், நேற்று 8 மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக, கடந்தாண்டிலிருந்தே தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, ‘ உடன்பிறப்பே வா’ என்ற பெயரில், தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.
முதல்நாளான நேற்று முன்தினம் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை ஒவ்வொருவராக சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து, ஏற்கெனவே எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில், தனித்தனியாக தயாரிக்கப்பட்ட கோப்புகளை வைத்து, அதில் உள்ள விவரங்களின் படி நிர்வாகிகளிடம் விவரங்களை பெற்றார்.
தொடர்ந்து, வரும் ஜூன் 17, 20-ம் தேதிகளில் தொகுதி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். இதன்படி 17-ம் தேதி பரமத்தி வேலூர், கவுண்டம்பாளையம், கிருஷ்ணகிரி, தொகுதி நிர்வாகிகளையும், 20-ம் தேதி செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், நேற்று 8 மண்டல பொறுப்பாளர்களையும் தனது முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார். சந்திப்பின்போது, மண்டல பொறுப்பாளர்கள் மேற்கொண்டுள்ள பணிகள், அவர்கள் பரிந்துரைகள் குறித்து கேட்டறிந்தார். விரைவில், மண்டல பொறுப்பாளர்கள் அளித்துள்ள பட்டியல் அடிப்படையில் சிலமாற்றங்கள் கட்சியில் மாவட்ட அளவில் இருக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.