சென்னை: எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து இணைவதால், தொகுதி பங்கீட்டில், பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. அதை முதல்வர் பார்த்துக் கொள்வார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அடையாறில் விசிக மாணவரணி சார்பில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் திருமாவளவன் பேசியதாவது: நாம் பேசுவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் பொறுப்பை உணர்ந்து பேசுவதே தலைமைப் பண்பு. தூண்டிவிட்டு போய்விடலாம். அது சாதி கலவரமாக மாறிவிடும். அது துப்பாக்கிச்சூடு வரை செல்லக்கூடும். அந்த பாதிப்புகள் யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்னும் பொறுப்புணர்வு தேவை.
தனக்கு அரசியல் ஆதாயம் கிடைத்தால் போதும், யார் எக்கேடு கெட்டால் என நினைக்கக் கூடாது. நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்புணர்வு தேவை. தலைமைப் பொறுப்பு சும்மா வந்து விடாது. ஈர்ப்பின் அடிப்படையில் மக்கள் திரளக் கூடும். அதை தக்க வைப்பது சிரமம்.
ஈர்ப்பு இருக்கும்: சினிமாவில் பிரபலமான நடிகர்கள் வந்தால் சில காலம் ஈர்ப்பு இருக்கும். ஆனால், தலைமைப் பண்பு இல்லாவிட்டால் ஈர்ப்பு இல்லாமல் போய்விடும். ஆவேசமாக, கையை உயர்த்தி உணர்ச்சிகரமாக பேசும் பேச்சாளர்கள் இருக்கலாம். அவர்களுக்கு பொறுப்பு இல்லாவிட்டால் தற்காலிகமாகவே நீடிக்க முடியும். நாம் பேசுவது எளிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: திமுக கூட்டணியில், பல கட்சிகள் வந்து சேர இருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ன நோக்கத்தோடு, முதல்வரை சந்தித்து பேசினார் என்பது எனக்குத் தெரியாது.
ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதால், அவருக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று நம்புகிறேன். எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து இணைவதால், எங்களுக்குள் தொகுதி பங்கீட்டில், பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. அதை கூட்டணியின் தலைவரான முதல்வர் பார்த்துக் கொள்வார். இவ்வாறு கூறினார்.