மறைமலை நகர் / குன்றத்தூர்: திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிளை, வார்டு, கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று மறைமலை நகரில் நடைபெற்றது:- கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி இன்று 75 ஆண்டுகளை நிறைவு செய்து பவள விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று, சந்தித்த அத்தனை தேர்தலையும் வெற்றி பெற்றிருக்கிறோம். தற்போது நம்முடைய ஆட்சி பல்வேறு மாநில அரசுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
நம்முடையது திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும். எனக்கு எத்தனையோ பொறுப்புகள் கிடைத்திருந்தாலும் என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பொறுப்பு இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்புதான்.
பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். இளைஞரணி சார்பாக களத்தில் மட்டுமல்ல கருத்தியல் ரீதியாகவும் பல பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். வெல்வோம் 200 படைப்போம் வரலாறு. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மறைமலை நகருக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகே மேளதாளம் முழங்க காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன், எம்.பி. செல்வம், மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் மதுசூதனன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மாநில, மாவட்ட இளைஞரணி அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 7,297 பேருக்கு ரூ.362.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் ரூ.8.24 கோடியில் 13 திட்டப் பணிகளை திறந்து வைத்ததுடன், ரூ.7.43 கோடி மதிப்பில் 5 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, ஆட்சியர் கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் ஆர்த்தி, சார் ஆட்சியர் ஆஷிக் அலி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலர் பட்டூர் எஸ்.ஜபருல்லா, குன்றத்தூர் மத்திய ஒன்றியச் செயலர் ஏ.வந்தே மாதரம், திருமுடிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் இ.மணி, குன்றத்தூர் நகரச் செயலர் மற்றும் நகர மன்றத் தலைவர் கோ.சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.