சென்னை: திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நேற்றும் தொடர்ந்தது.
இதன்படி காலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளும் பிற்பகலில் திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பூத் கிளை நிர்வாகிகள் நியமனத்தில் உள்ள முன்னேற்றம் குறித்து மாவட்டவாரியாக பழனிசாமி கேட்டறிந்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது: திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து மாவட்ட செயலாளர்கள் அதிக அளவில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களை நடத்த வேண்டும். ஏராளமான திண்ணை பிரச்சாரங்களை நடத்தி, திமுக அரசின் அவலங்களை மக்களிடம் விளக்க வேண்டும். கட்சிக்குள் இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்க வேண்டும்.
கட்சியில் உள்ள ஒவ்வொரு அணித் தலைவர்களும், அந்த அணியின் துறை சார்ந்த திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை அச்சிட்டு, துண்டு பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த ஆட்சியை அகற்ற தீவிர பணியாற்ற வேண்டும். உங்களுக்கு தான் துறை சார்ந்த தவறுகள் தெரியும். அதை தலைமைக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் தெரிவித்து, திமுக அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் அணித் தலைவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை இன்றே தொடங்கிவிட வேண்டும். பூத் கிளை நிர்வாகிகளை 100 சதவீதம் நியமித்து, அதுதொடர்பான பட்டியலை கட்சித் தலைமைக்கு ஜூலை 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதை செய்யாத மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகளுடன் மாவட்ட செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். உள்ளூர் பிரச்சினைகள் குறித்த விவரங்களை விரல் நுணியில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.