சென்னை: திமுக அரசை கண்டித்து மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சென்னை, கவிக்கோ அரங்கில் தமாகா சார்பில் மாநில அளவிலான பேச்சாளர்கள் பயிற்சி முகாம் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பேச்சாளர்கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் பேச்சாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஜி.கே.வாசன் பேசியதாவது: தமாகாவின் கொள்கை முழக்கங்களை பேச்சாளர்கள் பிரச்சாரமாக முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக திமுக அரசின் மக்கள் விரோத போக்கை, தமாகா கட்சியின் சிறப்பை, மறைந்த தலைவர்கள் ஜி.கே.மூப்பனார், காமராஜர் ஆகியோருடைய நல்ல சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையில் இருக்கக்கூடிய அரசு செய்திருக்கக் கூடிய சாதனைகளை மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஆளும் திமுக அரசின் அராஜகத்தை கண்டித்தும், கடந்த முறை கொடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், நடத்துவதென தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான பணிகளை சார்பு அணிகள் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார். நிகழ்வில், தமாகா துணைத் தலைவர்கள் விடியல் எஸ்.சேகர், ஏ.எஸ்.முனவர் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.