சென்னை: அனைவருக்குமான கல்வி உரிமையை நிலைநாட்டும் திமுக அரசின் செயல்பாடுகளே முனைவர் வசந்தி தேவிக்கு செலுத்தும் ஆக்கப்பூர்வமான அஞ்சலி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் மறைந்த வே.வசந்தி தேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் காணொலி வாயிலாக பங்கேற்று முதல்வர் பேசியதாவது: கல்வி என்பது வியாபாரப் பொருளாகவோ, அதிகாரக் கோட்டைக்குள் பாதுகாக்கப்படும் ஆயுதமாவோ இல்லாமல் எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
கல்விதான் அவர்களுக்கான ஆயுதம். அதுதான் அழிக்கமுடியாத செல்வம் என்னும் நோக்கத் தோடு தொடர்ந்து செயலாற்றி, அதற்கான இயக்கங்களை வசந்தி தேவி முன்னெடுத்தார். மாநில மகளிர் ஆணையப் பொறுப்பில் இருந்தபோது அவர் ஆற்றிய பணிகள் சிறப்பானவை.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து நின்றவர். நம் திமுக அரசின் பள்ளிக்கல்வி முன்னெடுப்புகளையும் மனமார பாராட்டியவர். அனைவருக்குமான கல்வி உரிமையை நிலைநாட்டும் திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் அவருக்கு செலுத்தும் ஆக்கப்பூர்வமான அஞ்சலி என்று கூறி அவருக்கு என்னுடைய புகழஞ்சலியை செலுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்வில், மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி, வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.