குன்னூர்: திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்ததே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என்று திமுக எம்பி கனிமொழிக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்ப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று குன்னூர், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களைச் சந்தித்தார். குன்னூர் பேருந்து நிலையம் அருகே மவுன்ட் ரோட்டில் கூடியிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் ஆற்றிய உரை:
திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா..?
இதே அதிமுக ஆட்சியில் எல்லா மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட மக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டால் மேட்டுப்பாளையம், கோவைக்குப் போக வேண்டிய நிலை இருந்தது. அதனால் சிறப்பான மருத்துவ சிகிச்சைக்கு 400 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தேன். அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கான மருத்துவமனையை கொடுத்தோம்.
விலைவாசி விண்ணை முட்டு அளவு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்வால் அடித்தட்டு மக்களும் தோட்டத் தொழிலாளர்களும் கடும் சோதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால், திமுக அரசு இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. அதனால்தான் பொம்மை முதல்வர், நிர்வாகத் திறமையற்றவர் என்கிறோம்.
நீலகிரியில் ஆன்லைன் பாஸ் முறை வந்துள்ளது. திமுக நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தினால் இப்படிப்பட்ட நிலை வந்திருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாகனம் தான் நீலகிரி செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீசனில்தான் அவர்களுக்குப் பிழைப்பு நடக்கும். விடியா திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் இன்றைக்கு 6 ஆயிரம் வாகனத்துக்கு மேல் வர முடியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தில் மக்களின் பிரச்னையை எடுத்துச்சொல்லி இதற்கு ஒரு தீர்வு காணப்படும்.
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. கீழிருந்து மலைப் பகுதி வரை வந்துவிட்டது. போதைப் பொருள் இல்லாத இடமே கிடையாது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்.
மலைப்பகுதி மக்கள் வீடு கட்ட சிரமப்படுகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கூடலூர் 3 தொகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்ட வேண்டும் என்று விண்ணப்பித்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான அனைவருக்கும் அனுமதி கிடைக்கும். திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் குறைக்கப்படும்.
குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.
திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதை துறை அமைச்சரே ஒப்புக்கொண்டார். அந்த பணம் எங்கே போனது? அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் இதெல்லாம் தோண்டியெடுத்து நீதிமன்றம் மூலம் சட்டரீதியான தண்டனை பெற்றுக்கொடுப்போம்.
கொரோனா காலத்தில் விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். நோயைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையிலேயே நல்ல முறையில் சிகிச்சை கொடுத்தோம். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். அதேயாண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500ரூபாய் கொடுத்தோம்.
திமுக ஆட்சியில் அதிமுகவின் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், .50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 82 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
நீலகிரி மலை கிராமம், ஏழை மக்கள் நிறைந்த பகுதி. ஏழை, விவசாய தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.
கனிமொழி பேசுகிறார். அதிமுக கட்சி அலுவலகம் டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் இருக்கிறது என்று பேசுகிறார். அந்தம்மா கனவு கண்டதா என்று தெரியவில்லை. கனிமொழி அவர்களே, அதிமுக அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது. வந்து பாருங்கள். நீங்களும் ஆள் வைத்து உடைத்துப் பார்த்தீர்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஏனென்றால் அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இரு தெய்வங்களும் அருள் புரிந்து காத்தருள்கிறார்கள்.
அதிமுகவை உடைக்க, பிளக்க சதி செய்தீர்கள், எந்த விதத்திலும் அதிமுக செயல்படக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் மூலமாக வெவ்வேறு விதத்தில் முயற்சி செய்தீர்கள், அத்தனையும் அதிமுக தொண்டர்களால் முறியடிக்கப்பட்டது. இது தொண்டர்கள் நிறைந்த கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி, ஸ்டாலின் அவர்களே நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை அசைக்கவோ ஆட்டவோ முடியாது. அதிமுகவை அழிக்க எத்தனையோ பேரை கொம்பு சீவிக்கொண்டிருக்கிறீர்கள், எத்தனையோ வழியில் சோதனையை ஏற்படுத்துகிறீர்கள். அத்தனை சோதனையும் தூள் தூளாக்கப்படுகிறது.
இதேபோல திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்தவர் ஜெயலலிதாதான் என்பதை மறந்துவிடாதீர்கள். திமுக ரெண்டாகப் போனபோது கருணாநிதி தடுமாறிக் கொண்டிருந்தார், அப்போது சிலர் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தபோது காப்பாற்றிக்கொடுத்தது அதிமுக. எப்போதும் அதிமுகவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்துதான் பழக்கம். ஆனால் திமுக மக்களுக்கும் உதவிசெய்தது கிடையாது, கூட்டணி கட்சிக்கும் உதவி செய்த வரலாறு கிடையாது.
இப்போது தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைகிறார்கள். அதிமுக ஆட்சியில் பச்சை தேயிலைக்கு ஒருகிலோவுக்கு 2 ரூபாய் கொடுத்தோம், அதை உயர்த்த வேண்டும் என்று கேட்டுள்ளனர், அதிமுக ஆட்சி அமைந்ததும் மானியம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல டான் டீ தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகள் சந்திக்கிறார்கள், அவர்கள் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.
கூட்டுக்குடிநீர் திட்டம் சரியாக பராமரிக்கவில்லை என்று சொல்கிறார்கள், மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் முறையாக பராமரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும். குன்னூர் வாகன நெரிசல் போக்க மல்டி லெவல் பார்க்கிங் கேட்டுள்ளீர்கள், அதுவும் அதிமுக ஆட்சியில் அமைத்துக்கொடுப்போம்.
அடுத்தாண்டு தேர்தலிலே அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.