சென்னை: சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பேரவை மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:ஜெயலலிதா பேரவை சார்பில், பழனிசாமியின் பிறந்தநாளான மே 12-ம் தேதி, ஆலயங்கள்தோறும் சர்வ சமய பிரார்த்தனைகள் நடத்தப்படும். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு, மே 12-ம் தேதி பழனிசாமியின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கும்போது, அவர் அனைவரின் ஆதரவுடன் முதல்வராக பொறுபேற்றுக்கொண்டு பணியாற்றுவார். அத்தகைய வெற்றி தீர்ப்பை 2026 தேர்தலில் பெற்றுத்தரும் வரை ஊண், உறக்கம் இன்றி, இரவு, பகல் பாராது ஜெயலலிதா பேரவையினர் உழைப்போம். அதற்காக மாபெரும் திண்ணை பிரச்சாரத்தை தொடர்ந்து எடுத்துச் செல்வோம். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.