சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு படிப்புகளில் சிறந்து விளங்கிய 304 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி,பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார். தாய்மொழிக்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது என்று குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேசினார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் 3,007 இளநிலை, 3,098 முதுநிலை உட்பட 7,972 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் பதக்கங்களை வென்ற 304 மாணவர்களுக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கினார். மேலும், ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையம் விருதை மாணவி திவ்யா பெற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குஜராத் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் உபாத்யாயா பேசியதாவது: மாணவர்கள் பட்டம் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இவர்கள் நம்நாட்டின் வளர்ச்சிக்காக தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை பட்டப்படிப்பில் பல்வேறு நுழைவுகள், வெளியேற்றத்தை வலியுறுத்துகிறது. நான் இலக்கியம் படிக்கும்போது, பிஎச்டி தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். மேலும், பாரம்பரிய நடன கலைஞராகவும் இருக்கவும் எண்ணினேன். எனது யோசனையை அனைவரும் பாராட்டினர். ஆனால், அப்போது அது சாத்தியமில்லாமல் போனது.
தற்போது தேசிய கல்விக் கொள்கை அனைத்திலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. உலகில் 7 பழமையான மொழிகளில் சமஸ்கிருதம், தமிழ் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை தாய் மொழி, பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் உங்கள் கையில் உள்ளது. நீங்கள்தான் நாட்டை வடிவமைக்க வேண்டும். தற்போது, உலகளவில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் அதிகமுள்ளது. செயற்கை நுண்ணறிவு மனித அறிவை மீற முடியாது. நமது வாழ்க்கை பயணத்தில், ஆன்மீக உண்மையை நம்முள் உணர்வதே இறுதி நிலையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் புறக்கணிப்பு: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே முரண்கள் நிலவுகின்றன. இதன்காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே மாநில பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை, இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சர்கள் புறக்கணித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்றும் திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தற்போது உயர்கல்வித் துறை அமைச்சராக உள்ள கோவி.செழியன் புறக்கணித்தார். தொடரும் இந்த மோதல் போக்கு எப்போதும் முடியும் என கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். இதற்கிடையே நேற்றைய பட்டமளிப்பு விழாவில் கோவையைச் சேர்ந்த கேபிஆர் மில் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 610 தொழிலாளர்கள் பட்டம் பெற்றனர். இதில் 17 பேர் பதக்கங்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.