அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச பட்டா ஆவணங்கள் தொடர்பான கோப்பு தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாயமானதால் கணினியில் பதிவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் தாம்பரம் அருகே மாடம்பாக்கம் கிராமம், அண்ணா நகர், சர்வே எண் 686/ஏ, 686/1சி என்ற சர்வே எண்ணில் புஞ்சை தரிசு நில வகை கொண்ட நிலத்தில் குடியிருந்த, 34 நபர்களுக்கு கடந்த, 2008-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, 2012-ம் ஆண்டு கூடுதலாக, 4 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த இலவச பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்து கணினி பட்டா வழங்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகம், அமைச்சர், எம்எல்ஏ, வட்டாட்சியர், ஜமாபந்தி, மக்கள் குறைதீர் முகாம் என பல்வேறு இடங்களில் மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், 38 நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா தொடர்பான கோப்புகள் அனைத்தும் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்மாயமாகி உள்ளது. இதனால் இலவச மனை பட்டா பெற்ற பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது புதிதாக வீடு கட்ட வங்கியில் கடன் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வீடுகளை வாங்கவும், விற்கவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட வேண்டுமென தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசும் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த முனிநாதன் என்பவர் கூறியதாவது: தற்போது பத்திரப்பதிவு அலுவலகத்திலும், வங்கியிலும் கணினி பட்டா இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. வங்கியில் கடனும் வழங்கப்படுகிறது. கடந்த, 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில், 34 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 2012-ம் ஆண்டு அதிமுக. ஆட்சியில், 4 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கும் போது காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தது. அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்டம் என தனியாக பிரிந்ததால் ஆவணங்கள் மாயமாகி, வருவாய் ஆவணங்களில் புறம்போக்கு நிலமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா தொடர்பாக மனுக்கள் அளித்தும் பதில் அளிக்கவே இல்லை. அனைத்து தரப்பினரும் இதுகுறித்து மனு அளித்து விட்டோம். தீர்வு கிடைக்கவில்லை. காரணம், வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமானதால் கணினியில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக ஆவணங்கள் மாயமாகி உள்ளது.
எனவே, அரசு இதில் தலையிட்டு பட்டா வழங்கப்பட்ட, 38 பேருக்கு முறையாக ஆய்வு செய்து அவர்களுக்கு கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம்பரம் வட்டத்தில் கணினி பட்டா பதிவேற்றம் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. பிரச்சினை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமானால், சம்பந்தப்பட்ட ஆவணங்களை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஆவணங்கள் மாயமானதற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, ஆவணங்கள் மாயமாவது தொடர் கதையாக உள்ளது என்று கூறினார்.