சென்னை: அனுமதியின்றி மாற்றங்களை செய்து வருவதால் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக வாடகை கட்டிடத்தை காலி செய்து தரக்கோரி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், அரசுத் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்ரி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் எங்களுக்கு சொந்தமான 4 மாடி கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் வாடகைக்கு வழங்கியிருந்தோம்.
அதற்கு மாதம் ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 300 என வாடகை நிர்ணயம் செய்திருந்தோம். கடந்த 2022 ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந் தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி வாடகை வழங்காமல் பொதுப்பணித் துறையின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி மாதம் ரூ.6 லட்சத்து 8 ஆயிரத்து 438 என நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக குத்தகைக் காலத்தை நாங்கள் நீட்டிக்கவில்லை. தற்போது எங்களது அனுமதியின்றி பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே எங்களது கட்டிடத்தை காலி செய்து எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” எனக்கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ராகவாச்சாரி, “ஒப்பந்தப்படி வாடகை தராததால், ஏற்கெனவே காலி செய்து கொடுக்க கோரியுள்ள நிலையில் உரிமையாளர்களின் அனுமதியின்றி பல்வேறு மாறுதல்களை செய்து வருகின்றனர்.
எனவே அந்த கட்டிடத்தை உடனடியாக காலி செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.