தாம்பரம் சானடோரியம், அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில், வார்டுகளுக்கு செல்லும் உட்புற சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலைக்கு மாறியுள்ளன. உள்நோயாளிகள் நடந்து செல்லக்கூட முடியாமல் கடும் அவதியடைகின்றனர். தாம்பரம் சானடோரியத்தில், 1928-ம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, நுரையீரல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக காசநோய் (TB) மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் ஒரு முன்னோடியாக திகழ்கிறது. மொத்தம், 800-க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் நோயாளிகளுக்கு, தொற்று மற்றும் தொற்று அல்லாத நுரையீரல் நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் இம்மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்கு காசநோய், எச்.ஐ.வி / எய்ட்ஸ், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), ஆஸ்துமா, ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுக்குழாய் தளர்ச்சி, நுரையீரல் அழற்சி, திசு இடைநார் நுரையீரல் நோய்கள் (Interstitial lung Diseases), நுரையீரல் புற்றுநோய் (Lung Malignancies) மற்றும் பல்வேறு வகையான சுவாசக் கோளாறுகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் காசநோய் சிகிச்சைக்கான சிறந்த மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, தீவிர சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை என கருதப்படும் இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில், வார்டுகளுக்கு செல்ல தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டுள்ளன. கடந்த சிலஆண்டுகளாக, இச்சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளன. நடந்து செல்லும் நோயாளிகள், சாலை பள்ளங்களில் தடுமாறி கீழேவிழுகின்றனர். நோயாளிகளை ‘ஸ்ட்ரெச்சர்’ படுக்க வைத்து அழைத்து செல்லும் போது, அதிர்வு ஏற்படுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. மூன்று சக்கர வாகனம் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவில் இருந்து ‘பேட்டரி’ கார்களில் செல்லும் நோயாளிகளும் இந்த மோசமான சாலைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆம்புலன்ஸ் செல்வதற்கும் நோயாளிகள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் முடியாமல் உள்ளது. எனவே, காசநோய் மருத்துவமனையில் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளை பராமரிக்க வேண்டியது பொதுப்பணி துறையினர் ஆகும். ஆனால், அவர்கள் புதிய கட்டிடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து ஏற்கெனவே உள்ள கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளை முறையாக செய்வதில்லை. புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் அதிக வருவாய் கிடைப்பதால், பழைய கட்டிட பணிகளை பொதுப்பணித்துறைனர் செய்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து ராஜேந்திரன் என்கிற நோயாளி கூறியதாவது: இயற்கை எழில் நிறைந்த இந்த மருத்துவமனையில் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைக்கு நிகராக தரமாக வழங்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள உட்புற சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் நோயாளிகளை அழைத்துச் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
நோயாளிகள் ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு செல்ல முடியாமல்அவதிப்படுகின்றனர். தரமான சாலை இல்லாததால் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த மருத்துவமனை அருகில்புதிதாக பெரிய அளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இருக்கும் மருத்துவமனை கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே அரசு இதில் தலையிட்டு மருத்துவமனையில் உள்ள அனைத்து சாலைகளையும், மருத்துவமனையில் உள்ள கட்டிட பழுதுகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம் என்றார்.