நாமக்கல்: கரூர் விவகாரத்தில் அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை தவெக இழந்துவிட்டது. எனவே, அக்கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று வழிபட்ட அர்ஜுன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியினர் தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு என்ற போர்வையில் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அத்தகைய இயக்கங்களை தடை செய்ய வேண்டும்.
கரூர் நகரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் உயிரிழந்தனர். சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில், முதல்வர் முன்னிலையில் 60 பேர் மயக்கமடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர். அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை சரிவர கடைப்பிடிப்பதில்லை. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நெரிசலில் பக்தர்கள் சிக்குவதைத் தடுத்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும்.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நீதி கோரி இந்து மக்கள் கட்சி மாபெரும் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துள்ளோம். இனியும் இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழக்கூடாது. அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட தவெக கூட்டத்துக்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை.
கரூர் விவகாரத்தால் தவெக அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்திய தேர்தல் ஆணையம் அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். மேலும், அக்கட்சியின் தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும். 41 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த, மக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கலைக்க வேண்டும். விஜய் மீது எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.