சென்னை: தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக நவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய செயலியின் செயல்பாடு குறித்து, கட்சியின் நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தவெக சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சார பயிற்சிப் பட்டறை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பொதுச்செயலாளர் தலைமை வகித்தார். இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அந்த மாவட்டத்தின் தொழில்நுட்ப அணியில் இருந்து 2 ஐடி விங் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயிற்சி பட்டறையின் போது தவெக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து வீடுவீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கை அதிகரிப்பது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஏற்கெனவே உறுப்பினர் சேர்க்கைக்கு செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தொடர்ந்து தவெக சார்பில் நவீன வசதிகளுடன் ‘மை-டிவிகே’ என்ற செயலி உருவாக்கப்பட்டு அதன்மூலம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்த செயலியின் பயன்பாடு குறித்தும், செயலி மூலம் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு செல்போன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. மடிக்கணினியுடன் மட்டுமே பயிற்சியில் கலந்து கொண்டனர்.