கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு தவெக தவறும், அரசின் கவனக்குறைவுமே காரணம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியது: “இதற்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். குறுகலான சாலையை வழங்கியுள்ளனர். உள்நோக்கத்தோடு வழங்கப்பட்டதா என தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
குறுகலான இடம், காலதாமதம், மின் தடை, போலீஸ் தடியடி, ஆம்புலன்ஸ் வருகையால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. தவெக தலைவர் விஜய் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிக்கும்போது உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸார் அந்தளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அளிப்பதில்லை. தொண்டர்கள் படை அமைத்து தவெக உணவு, குடிநீர், நிழல் வசதி செய்து தரவேண்டும். ரோடு ஷோ போல நடத்தாமல் மாநாடு போல ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். குழந்தைகள், பெண்கள் வந்துள்ளனர். போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். அவர் பேசப்போவது 10 நிமிடம்தான். தவெகவின் தவறு, அரசின் கவனக்குறைவே இதற்கு காரணம்” என்றார்.
பாமக தலைவர் அன்புமணி: குறுகிய இடத்தில் இல்லாமல் பெரிய இடத்தில் நடத்தி இருக்கவேண்டும். அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளவேண்டும். குடிநீர், உணவு, நிழல் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பொதுமக்களும் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும். குழந்தைகள், பெண்கள் வருவதை தவிர்த்திருக்க வேண்டும்.
இருக்கைகள் போடப்படாமல் நடந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்படுவதை தடுத்திருக்கவேண்டும். வருங்காலங்களில் திட்டமிட்டு இதுபோன்ற தவறுகளை தவிர்க்கவேண்டும். இதில் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. அரசியல் கட்சிகள் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் காட்டக்கூடாது என்றார்.
சசிகலா: அரசியல் கட்சியினர் பிரச்சாரத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுப்பார்கள் காவல் துறை அனுமதி வழங்கும். திமுக அரசு தான் இதற்கு காரணம். மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.