சென்னை: பள்ளிகளில் காலை உணவின் தரத்தை உயர்த்தாமல் அத்திட்டத்தை விரிவுபடுத்துவது பெரிய அளவில் பலன் அளிக்காது என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் நகர்ப்பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்நிலையில், காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு தங்கள் மனதுக்கு நிறைவான இந்நன்னாளில், சமீபத்தில் தாராபுரம் அரசுப் பள்ளியிலும் திருவாரூர் பூனாயிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.
இவை வெறும் எடுத்துக்காட்டுச் சம்பவங்களே. காலை உணவில் நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் வரிசைப்படுத்த வேண்டுமென்றால் சீனப் பெருஞ்சுவர் போதாது என்பதே உண்மை.
பிஞ்சுக் குழந்தைகளின் பசியாற்ற வேண்டிய காலை உணவில் புழு முதல் பல்லி வரை கிடக்கிறதே, அது திமுக அரசின் விழிகளுக்குப் புலனாகவில்லையா? ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டிய உணவை நெடுந்தூரத்தில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து ஊசிப்போன உணவாக மாறவிடுவது தான் திமுக அரசின் சாதனையா, உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அரசு பள்ளிகளில் படிப்பது ஏழை எளிய குழந்தைகள் தானே என்ற அலட்சியமா அல்லது போலி விளம்பரங்களின் மூலம் காலை உணவில் நடக்கும் குளறுபடிகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.