சென்னை: விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தை – அடிமைத்தனத்தை வீழ்த்துவோம் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ ஓடாநிலையில் கோட்டைக்கட்டி ஆண்டு தன் வீரத்தாலும் – தியாகத்தாலும் கோடானு கோடி மக்கள் மனதில் நிலைத்திருக்கும் மாவீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று.
அடிமைத்தனமே தோல்விக்கான தொடக்கப்புள்ளி என ஆதிக்கத்துக்கு அடிபணிய மறுத்து அந்நிய படையை விரட்டியடித்த தன்னிகரில்லா வீரத்துக்குச் சொந்தக்காரர்.
மண் காக்க, மக்கள் மானம் காக்க போரிட்டு உயிர்நீத்த தீரன் சின்னமலை நினைவைப் போற்றுவோம். அவர் வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தை – அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்