மதுரை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆறுகள், அரசு நிலங்கள் மற்றும் ரயத்துவாரி நிலங்களில் சட்டவிரோதக் குவாரிகள் மூலம் விதிகளை மீறி உவர், சவடு, கிராவல் மணல் அள்ளப்படுகிறது. இதனால் இயற்கை வளம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
வைகை, காவிரி, பாலாற்றில் மணல் அள்ளியதால் இயற்கை நீரோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்குகின்றன. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
பட்டா நிலத்தில் மண் அள்ளுவதால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதனால், மதுபான விற்பனைக்கு டாஸ்மாக் நிறுவனம் இருப்பதுபோல் மண், மணல் அள்ளுவது மற்றும் விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த டாம்சாக் (தமிழ்நாடு மணல் கழகம்) அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை மண், மணல் அள்ள உரிமம் வழங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், “இது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. இதில் நீதிமன்றம் தலையிட்டு, அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.