சென்னை: தமிழகத்தில் 3,170 யானைகள் உள்ளதாக வனத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். யானைகள் பாதுகாப்பில் தமிழகம் நீண்டகாலமாகவே முன்னணி வகிக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவுடன் இணைந்து கடந்த மே 23 முதல் 25-ம் தேதி வரை 3-வது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், பிராந்திய வனப் பிரிவுகள் மற்றும் ஒரு தேசியப் பூங்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 2,043 வனத் துறைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மொத்தமுள்ள யானைகளில் 44 சதவீதம் வளர்ச்சியடைந்தவை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், யானைகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை தலைமைச் செயலகத்தில் வனத் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் 3,170 காட்டு யானைகள் உள்ளன. முந்தைய கணக்கெடுப்பில் 3,063 யானைகள் உள்ளதாக தெரியவந்தது.
தற்போது 107 யானைகள் அதிகம் உள்ளன. தமிழக யானைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலையான வளர்ச்சி, அறிவியலை அடிப்படையாகக் கொண்ட வன விலங்கு மேலாண்மை மற்றும் சமூகப் பங்களிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ளது.
வளம் குன்றிய காடுகளை மீட்டெடுப்பது, யானை வழித்தடங்களை வலுப்படுத்துவது, மனித-யானை மோதலைத் தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட எங்களது அணுகுமுறைகள் முழுமையானதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் உள்ளன. இவ்வாறு தெரிவித்தார். வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு கூறும்போது, “யானைகள் நமது காடுகளிலும், கலாச்சார அடையாளத்திலும் அங்கமாக உள்ளன. அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, நமது கொள்கைகள் பலனளிப்பதற்கான அறிகுறியாகும்.
வாழ்விட மறுசீரமைப்பு, அந்நிய களைச்செடிகளை அகற்றுதல், தீவனம் மற்றும் நீர் மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் முழுகவனம் செலுத்தி வருகிறோம்” என்றார். நிழ்வில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நிவாஸ் ஆர்.ரெட்டி, தலைமை வன உயிரினக் காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா பங்கேற்றனர்.