சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்தித்தனர்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்தனர். விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர். தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வரை சந்தித்த கூட்டணி கட்சியினர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. எனவே வரவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது தொடர்பான சட்டம் கொண்டுவர இந்த கட்சிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.