ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 500 விசைப் படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் சனிக்கிழமை (நேற்று) கடலுக்குச் சென்றனர். இதில் ஈசாக் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே உள்ள கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 7 பேரையும் கைது செய்தனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று அந்நாட்டு மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து 7 மீனவர்களையும், ஊர்காவல்துறை நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் (இன்று) ஞாயிற்றுக்கிழமை மாலை அடைக்கப்பட்டனர்.

இதேபோல், சனிக்கிழமை இரவு கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மரிய சீரோன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சிறைப்பிடிக்க முயன்ற இலங்கை கடற்படை ரோந்துப் படகு, மீனவர்களின் விசைப்படகு மீது மோதியதில் விசைப்படகின் பின் பகுதி உடைந்து சேதமடைந்தது.
அப்படகில் இருந்த ஸ்டாலின், முனீஸ்வரன், வியாகுலம், கொலம்பஸ், நாகேஷ், ஸ்டீபன், சரத்குமார் ஆகிய ஏழு மீனவர்களும் அதிர்ஷடவசமாக தப்பி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் வந்தடைந்தனர். மேலும், கடந்த ஒரு மாதத்தில் ராமேசுவரம் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி, இலங்கை கடற்படையினர் 22 மீனவர்களையும் கைது செய்துள்ளது குறிப்பிடதக்கது.