சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு டீன்களும், சுகாதாரத் துறைகளுக்கு புதிய இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை (டிஎம்எஸ்) இயக்குநர் ராஜமூர்த்தி ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்றனர். அதேபோல, குடும்ப நலத்துறை இயக்குநர் பதவிக்கு இதுவரை முழு பொறுப்பு அடிப்படையில் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில், அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, பரிசீலனைக்கு பிறகு, அதற்கான நியமன ஆணைகளை சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் ஏ.சோமசுந்தரம், துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குநர் டி.கே.சித்ரா, அத்துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். குடும்ப நலத்துறை இயக்குநராக சந்தியா, மாநில மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலராக லோகநாயகி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்களை பொருத்தவரை, சென்னை ஓமந்தூரார் டீன் அரவிந்த், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கும், திருவண்ணாமலை டீன் ஹரிஹரன், ஓமந்தூரார் மருத்துவமனைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மருத்துவக் கல்லூரி – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை துணை டீன் கவிதா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீனாகவும், அந்த மருத்துவமனையின் டீனாக இருந்த லியோ டேவிட், கன்னியாகுமரி டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, கோவைக்கு கீதாஞ்சலி, செங்கல்பட்டுக்கு பிரியா பசுபதி உட்பட 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய டீன்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.