சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்து. பின்னர் மார்ச் 14-ல் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் மார்ச் 17 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. இறுதியாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளித்தனர்.
முன்னதாக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த மார்ச் 24-ம் தேதி துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி ஏப். 29-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரின்போது தமிழக அரசு சார்பில் 18 சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்து நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, மார்ச் 24-ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல், கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
சட்டப்பேரவை விதிகள்படி ஒரு பேரவைக் கூட்டம் முடிவுற்றால், அடுத்த கூட்டம் 6 மாதங்களில் நடைபெற வேண்டும். அதன் அடிப்படையில் வரும் அக். 14-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று அறிவித்தார். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சட்டப்பேரவை விதிகள்படி அக். 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு பேரவைக் கூட்டம் கூடுகிறது. அன்று முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. மேலும், வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து, 2025-26-ம் நிதியாண்டுக்கான கூடுதல் செலவினம் தொடர்பான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவை அக். 14-ம் தேதி கூட உள்ள நிலையில், அன்று அலுவல் ஆய்வுக் குழு கூடி, எத்தனைநாட்கள் பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்கும். பேரவைக் கூட்டம் நடைபெறும் வாரத்துக்கு அடுத்த வாரம் தீபாவளி என்பதால், பெரும்பாலும் 4 நாட்கள் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. முதல் நாளில் இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படும். மற்ற 3 நாட்கள் பேரவை நிகழ்வுகள் நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.