சென்னை: “காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்படும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (செப்., 08) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய கண்மூடித்தனமான தாக்குதல்கள், நம் எல்லோருடைய மனதை இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மனது மட்டுமல்ல, உலகத்தையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.
பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான, மனித உரிமை ஆதரவை மனப்பூர்வமாக நாம் வழங்குகிறோம். இதுதான் இந்தக் கண்டண இயக்கத்தின் முழக்கமாக அமைந்திருக்கிறது. கடந்த ஓராண்டாகவே, காசாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதுவரையில், ஏறக்குறைய 11 ஆயிரம் பெண்கள் – 17 ஆயிரம் குழந்தைகள் – 175 பத்திரிக்கையாளர்கள் – 125 ஐ.நா. ஊழியர்கள் என்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள்; ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்; சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஓராண்டில் காசாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு எதிராக, பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடுமைகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஜூன் மாதத்தில், பட்டினியால் வாடக்கூடிய பாலஸ்தீனர்கள், உணவுப் பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். உணவுக்காக காத்திருந்தவர்களின் உயிரையே பறித்திருக்கக்கூடிய இந்தக் கொடூரத்தை பார்த்து, எல்லோருடைய இதயமும் நொறுங்கி போயிருக்கிறது.
மனித உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமையான இந்த அநீதிகளைக் கண்டிக்காமல் – அமைதியாக கடந்து செல்ல யாருக்காவது மனது ஒப்புமா? சில நாட்களுக்கு முன்னால், மற்றொரு செய்தி வந்தது. காசாவில் மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டு இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு வழங்க, உணவுப் பொருட்கள் – மருந்துகள் – குழந்தைகளுக்கான பால் பவுடர்களைக் கொண்டு சென்ற, 47 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களைத் தடுத்து கைது செய்திருக்கிறது இஸ்ரேல்.
பன்னாட்டு சட்டங்களை மீறும் இதுபோன்ற செயல்களைக் கண்டிக்காமல் நம்மால் இருக்க முடியுமா? காசாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.
இதற்கான முயற்சிகளை, இந்திய ஒன்றியத்தை ஆளக்கூடிய பாஜக அரசு வேகமாக மேற்கொள்ளவேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் மூலமாக எல்லோருடைய சார்பிலும் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஒன்றிய பாஜக அரசு, இஸ்ரேல் மற்றும் பிற தொடர்புடைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்தாகவேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து, காசாவில் அமைதியை நிலைநாட்டவும், மனிதாபிமான உதவிகளை செய்யவும், இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மனிதாபிமானம் இருக்கும் எல்லோரும் இதை வேறொரு நாட்டு விவகாரமாக நாம் பார்க்கக் கூடாது. உலக அமைதி என்பது, எல்லோருக்கும் பொதுவானது. மனித உரிமை என்பதை எல்லோரும் காக்க வேண்டும். மானுட உயிர்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பு இல்லாதது. இந்த மூன்றையும் காக்கின்ற கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. இந்த மோசமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, உணவு – மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அவசிய உதவிகளும், உடனடியாக முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
பாலஸ்தீனர்களின் மறுவாழ்வுத் திட்டம், காசாவை மறு கட்டமைப்பு செய்வது – மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்து தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். உலக நாடுகள் முன் வைக்கும் நிபந்தனைகள் – உறுதிமொழிகள், பாலஸ்தீன மக்களுக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். வருகின்ற 14-ஆம் நாள், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும்.
இந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும்; அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த கூட்டம் மூலமாக, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன். அப்பாவி மக்கள் உயிர் இழப்பது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.