சென்னை: பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்.29 முதல் மே 5 வரை கொண்டாடப்படும் தமிழ் வாரத்தையொட்டி, “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில் நடத்தப்படவுள்ள பல்வேறு போட்டிகள் மற்றும் அதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சட்டப் பேரவையில் விதி- 110ன் கீழ் தமிழக முதல்வர், ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். அதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. போட்டிகள் அதன் விதிமுறைகளும் பின்வருமாறு:
பேச்சுப் போட்டி தலைப்புகள்:
- தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
- உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!
- பாரடா உனது மானிடப் பரப்பை!
- எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் ஒரு கதை சொல்லட்டுமா!, ஆகிய தலைப்புகள் குறித்துப் பேசி பதிவிட வேண்டும். 3 நிமிட வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைதல் வேண்டும்.
கவிதைப் போட்டி தலைப்புகள்:
- தமிழே! தமிழர் உயிரே!
- வரிப் புலியே தமிழ் காக்க எழுந்திரு!
- இனிமைத் தமிழ்மொழி எமது!
- தமிழும் நானும், ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 1 பக்க அளவில் கவிதைகள் அமைதல் வேண்டும். கவிதைகளை எழுதி PDF கோப்பாக அனுப்ப வேண்டும்
கட்டுரைப் போட்டி தலைப்புகள்:
- புதியதோர் உலகு செய்வோம்
- துறைதோறும் தொண்டு செய்வாய்!
- அறிவை விரிவு செய்!
- மாபெரும் தமிழ்க் கனவு, ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைதல் வேண்டும்.கட்டுரைகளை எழுதி PDF கோப்பாக அனுப்ப வேண்டும்
ஓவியப் போட்டி: பாவேந்தரின் கவிதைகள், காவியங்கள், நாடகங்களைக் கருவாகக் கொண்டு ஓவியங்கள் அமைதல் வேண்டும். ஓவியங்களை PDF கோப்பாக அனுப்ப வேண்டும்
ஒப்பித்தல் போட்டி தலைப்பு: பாவேந்தரின் ‘தமிழியக்கம் நூலிலிருந்து 1(கரும்பு தந்த தீஞ்சாறே), 3 (ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்) பாடல்களைப் பரிந்துரைக்கலாம், குறித்து பதிவிட வேண்டும். 3 நிமிட வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைதல் வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்பவர்கள், tndiprmhtamilvellum@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் கீழ்கண்ட விரைவு க்யுஆர் கோட் (QR code) வாயிலாகவும் படைப்புகளை மே- 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.