சென்னை: தமிழக அஞ்சல் துறை சார்பில், நடக்க உள்ள குறை தீர்க்கும் முகாமுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை 22-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘டாக் சேவா ஜன் சேவா’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக வட்டம் அஞ்சல் துறை சார்பில், வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,832 அஞ்சல் நிலையங்களின் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் பங்கேற்கலாம்.
அஞ்சல் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் சேவைகளை சிறப்பாக மேம்படுத்துவது குறித்து வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை டாக் அதாலத் என்ற தலைப்பில் ஏ.சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகம், தமிழக வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு செப்.22-ம் தேதிக்குள் அனுப்பலாம். மேலும் டாக் அதாலத் என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
இத்தகவல் தமிழக அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.