சென்னை: தமிழகம் முழுவதும் 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்தவர்களை, 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், நர்ஸ்கள் பொதுநல சங்கம், தமிழ்நாடு அரசு கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் எ.சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநர் சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2025-ல் மக்கள் தொகைக்கேற்ப மேலும் 642 துணை சுகாதார நிலையங்கள், கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது கிராமப்புறங்களில் 8,713 துணை சுகாதார நிலையங்களும், நகர்புறங்களில் சென்னை உட்பட 2,368 துணை சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன. கிராமப்புற சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை செவிலியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.
கிராம சுகாதார செவிலியர்கள் தாய் சேய் நலப்பணி, தடுப்பூசி பணி, குடும்ப நலத்திட்ட பணிகள்,கருத்தடையை ஊக்குவித்தல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், வளரிளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்குதல், ரத்தசோகை தடுப்பு மாத்திரை வழங்குதல், பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, கிராமபுறங்களில் சிறுசிறு நோய்களான வயிற்றுப்போக்கு, சுவாச தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளித்தல், குடும்ப பதிவேடு பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
துணை செவிலியர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், பிரசவம் பார்த்தல், தடுப்பூசி பணிகள், தாய் சேய் நல பரிசோதனை போன்ற பணிகளை செய்கின்றனர். உச்சநீதிமன்ற வழக்கில் தடையாணை காரணமாக துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்ளும் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர்களின் காலி பணியிடங்களை நிரப்பிட அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதிக்கு முன்பு தேர்ச்சிபெற்ற 1,231 பேருக்கு வெளிப்படையான முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு காலியிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2,417 காலியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.