சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 13) முதல் வரும் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 16, 17, 18-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் 15 முதல் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 81 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை சென்ட்ரலில் 7 செ.மீ., சென்னை கொரட்டூர், விம்கோ நகர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் 6 செ.மீ., சென்னை சோழிங்கநல்லூர், ஐஸ் ஹவுஸ், கோவை மாவட்டம் சோலையாறு, அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அணை, திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், சிவகங்கை, செங்கல்பட்டு மாவட்டம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் 5 செ.மீ., சென்னை பாரிமுனை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.