சென்னை: மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த ஒரு கும்பல் பொய்யை மட்டுமே பரப்பி வருவதாகவும், ஆனால் தமிழகம் மற்ற மாநிலங்களை போல எதையும் உடனே நம்பாது என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு மாநில அளவிலான 3 நாள் பயிற்சி பட்டறை சென்னையில் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
அதில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சமூக ஊடகங்கள் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில், மிகப்பெரிய அளவில் பொய்யான செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. வதந்திகளைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் உண்டு. ஒன்று எந்த உள்நோக்கமும் இல்லாமல் பரவுகிற பொய் செய்திகள். மற்றொன்று திட்டமிட்டு, உள்நோக்கத் தோடு பரப்பப்படுகிற செய்திகள்.
இதில் இரண்டாம் வகை மிக, மிக ஆபத்தானது. போலி செய்திகள் மட்டுமல்ல, வெறுப்பு பேச்சும் பெரிய அளவில் நம் நாட்டை பாதித்து வருகின்றன.குறிப்பாக, சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், வெறுப்புப் பேச்சால் மிகவும் பாதிக்கப்படுகிற சூழல் நிலவி வருகிறது.
மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும், அறிவை மழுங்க செய்யும் நோக்கத்துடனும் பொய்யான கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசும்போது, ‘பிறப்பால் ஏற்றத்தாழ்வு சொல்கின்ற எந்த விஷயத்தையும் அழிக்கணும்’ என்று சொன்னேன்.
அதை திரித்து, நான் சொல்லாத விஷயங்களையும் சொன்னதாக நாடு முழுவதும் பரப்பிவிட்டனர். அதற்காக, என் தலையை சீவினால் ரூ.10 லட்சம் தருகிறேன் என ஒரு சாமியார் சொன்னார். மற்ற மாநிலங்களைப்போல் தமிழகம் எதையும் உடனே நம்பாது.
இது பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண். இதையொட்டியே தமிழக அரசின் சார்பில் பிரத்யேக உண்மை சோதனை பிரிவு தொடங்கப்பட்டது. இன்றைக்கு இந்த பிரிவின் வேகத்தை பார்த்து தவறான தகவல்கள் பரப்புகின்ற கும்பல் கதறி கொண்டிருக்கின்றனர். இதனால் சமீப காலமாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தமிழகத்தில் மிகவும் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ், கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையர் சுந்தரவல்லி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தகவல் சரிபார்ப்பகம் இலக்கு இயக்குநர் ஐயன் கார்த்திகேயன், நாட்டு நலப்பணித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் குணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.