தூத்துக்குடி: தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடியை அளித்துள்ளதாகவும், இது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகையைவிட 3 மடங்கு அதிகமாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்தும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வடக்கு முனையம்-3 உட்பட, தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் பிரதமர் மோடி பேசியதாவது:
மேக் இன் இந்தியா திட்டத்தால் இந்தியா பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழகத்தின் ஆற்றல் வளத்தை மேம்படுத்த, தூத்துக்குடி துறைமுக கட்டமைப்பை உயர்தொழில்நுட்பத்துடன் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கு ரூ.450 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள விமானமுனையம், ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும்.
3 மடங்கு அதிகம்… தமிழகத்தில் ரூ.2,500 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள சாலை திட்டங்களால் வர்த்தகம், வேலைவாய்ப்புக்கான பாதைகள் திறக்கும். கடந்த 11 ஆண்டுகளில் ரயில்வே நவீனமயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவு நமது முக்கியமான உறுதிப்பாடாகும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடியை அளித்திருக்கிறது. இந்த தொகை கடந்த காங்கிரஸ் அரசு அளித்த தொகைையைவிட 3 மடங்கு அதிகமாகும்.
கடந்த 11 ஆண்டுகளில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக கரையோர மீன்பிடித் துறைமுகங்களுக்கு இத்தனை கரிசனத்தையும், அக்கறையையும் இதற்கு முன்பு யாரும் வெளிப்படுத்தவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். அதனுடன் தொடர்புடைய கொள்கைகளுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.