நாகப்பட்டினம்: தமிழகத்தில் கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சில ஆயிரம் கோடியை முதலீடாகப் பெறுவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி போக வேண்டிய அவசியமில்லை.
ஏற்கெனவே, முதல்வர் குடும்பத்துடன் வளைகுடா நாடுகளுக்குச் சென்றார். அங்கிருந்து எவ்வளவு முதலீடு கொண்டுவந்தார் என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் பெரியார் படத்தை திறந்துவைத்தேன் என்று முதல்வர் பெருமையாக பேசுகிறார். அந்தப் பல்கலைக்கழகம் படத் திறப்பு விழாவை நடத்தவில்லை. அங்கு பணம் கட்டினால், யார் வேண்டுமானாலும் படம் திறந்து வைக்கலாம், கூட்டம் நடத்தலாம்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளன. பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள்பயன்பாடு அதிகரித்துள்ளது. மீண்டும் திமுக அரசு அமைந்தால் அடுத்த தலைமுறை அழிந்து போகும். எனவே, அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அரசியலில் இருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.