சென்னை: மேக்ஸி கேப் வாகனங்களை மினி பேருந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: ஊரகப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் மினி பேருந்துகள் திட்டத்தை புதுப்பித்து கடந்த ஜூன்மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதில் சுமார் 1,000 ஆபரேட்டர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஆனால் குறைந்தது 5,000 மினி பேருந்துகள் தேவைப்படுகின்றன.
இந்நிலையில், அனைத்து பகுதியில் உள்ள மக்களுக்கும் போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில் தனியார் மேக்ஸி கேப் வேன்களை மினி பேருந்துகளாக இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை பொது போக்குவரத்துக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக பொதுப் போக்குவரத்து வாகனங்களின் குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ என்பதை திருத்தி, 200 செ.மீ ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அறிக்கை அளிக்க உத்தரவு: அதேநேரம், வேன்களில் பயணிகள் நின்று செல்ல அனுமதி இல்லை. இவ்வாறான திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மலைக் கிராம மக்கள் உள்ளிட்ட ஊரகப் பகுதி மக்களுக்கு பேருந்து சேவை கிடைக்கும். இது பற்றி விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலரும் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மினி பேருந்து உரிமையாளர்கள் கூறியதாவது: தற்போது மக்களிடம் பொருளாதார வசதிகள் மேம்பட்டுள்ளது. பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கியதால் ஏற்கெனவே நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறோம். அப்படி இருக்க, ஆபரேட்டர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றால் அரசின் நடவடிக்கை தான் காரணம். பேருந்துகளை வைத்து உரிமத்துக்காக காத்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த வகையில் 2 ஆயிரம் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் பலர் வாகனத்தை விற்று, தொழிலை விட்டு சென்று விட்டனர்.
மேலும், மினி பேருந்துகளுக்கான வீல் பேஸ் 3,900 மி.மீ. இருக்க வேண்டும் என விதி இருக்கிறது. அப்படி ஒரு பேருந்து சந்தையில் வெகு குறைவாகவே இருக்கிறது. இதை மாற்றியமைக்க கோரினாலும் செய்யவில்லை. இதற்கெல்லாம் மேலாககுறைந்தபட்ச கட்டணம் ரூ.10 என நிர்ணயிக்க வேண்டும். இது நியாயமான கோரிக்கை என அரசு தரப்பில்கூட குரல்கள் எழுந்துள்ளன. இவை எதையுமே செய்யவில்லை. இதனாலேயே புதியவிண்ணப்பங்கள் வந்திருக்காது. இதில் சிலவற்றை நிறைவேற்றினால் அரசு எதிர்பார்ப்பதை போல குறைந்தபட்சம் 3 ஆயிரம் மினி பேருந்துகளாவது இயங்க தொடங்கியிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.