திருநெல்வேலி: தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் வாக்குத் திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் ப. சிதம்பரம் பேசியதாவது: “வாக்கு எண்ணிக்கையில் பிழைகள் இருப்பது தெரியும். தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிப்பதும் நமக்கு தெரியும். சிறுபான்மையினரை, தாழ்த்தப்ப்டடவர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பது தெரியும். ஆனால் வாக்குத் திருட்டு குறித்து ராகுல்காந்தி சொன்னபின்னர்தான் அனைவருக்கும் தெரிகிறது.
கர்நாடகத்தில் பெங்களூர் மத்திய தொகுதியில் 7 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் மகாதேவ்பூரா சட்டப் பேரவை தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 3 சட்டப் பேரவை தொகுதிகளில் பாஜக வேட்பாளர் முன்னிலையில் இருந்தார், 3-ல் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர்கான் முன்னிலையில் இருந்தார். இந்த 6 தொகுதிகளிலும் நிகர முன்னணி என்றால் மன்சூர்கான் 88 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார். ஆனால் ஒரு சட்டப் பேரவை தொகுதியில் லட்சத்துக்கு அதிகமான முன்னணியில் இருந்ததாக தெரிவித்து, பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வாக்குத் திருட்டு குறித்து ராகுல்காந்தி அம்பலப்படுத்தியும் தேர்தல் ஆணையம் அதை விசாரிக்க மறுக்கிறது. போலியான வாக்காளர்களை சேர்ப்பது, உண்மையான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, ஒரு முகவரியில் 120 பேரை சேர்ப்பது, அவர்கள் பெயரில் பாஜகவினர் வாக்களித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதெல்லாம் தில்லுமுல்லு என்று பல புள்ளியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். வாக்குத்திருட்டு பிஹாரில், கர்நாடகத்தில், மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது.
அதுபோல் தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டுக்கான சதி நடைபெறலாம். அதை செயல்படுத்த பாஜக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில்,கேரளத்தில் அதை நடக்க விடமாட்டோம். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணி வலிமையான அணி. ஆனால் அதிமுக அணியை குறைத்து மதிப்பிடமாட்டேன். இந்த 2 அணிகள் இருந்தால் வாக்குத் திருட்டு நடைபெறாது. தமிழகத்தில் திமுக அணி, அதிமுக அணி என்று மட்டும் இருந்தால் வாக்குத் திருட்டு நடைபெறாது. ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக சென்றிருப்பதால் சந்தேகம் வருகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் வாக்குத் திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. எனவே விழிப்போடு இருங்கள். இல்லாவிட்டால் பிஹார் போன்று தமிழ்நாட்டிலும் நடக்க வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு உயிரூட்டியது தமிழகத்தை சேர்ந்த டி.என். சேஷன். ஆனால் தேர்தல் ஆணையத்தை முடக்கியது பாஜக. இன்னும் 8 மாதங்கள் விழிப்போடு இருந்து வாக்குத் திருட்டை தடுத்து, தேர்தல் நியாயமாக நடக்க செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.
சட்டப் பேரவை காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ராபர்ட் புரூஸ் எம்.பி. தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கட்சியின் அகில இந்திய பொதுசெயலர் பவன் கெரா, சூரஜ் ஹெக்டே, முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர், எம்.பிக்கள் விஜய்வசந்த், சசிகாந்த் செந்தில், தாரகை கத்பர்ட் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்று பேசினர். மாநாட்டில் பங்கேற்ற அனைவரும், வாக்குரிமை மீட்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வாக்குகளை திருடாதே என்ற கோஷமும் எழுப்பப்பட்டது.