சென்னை: தமிழகத்தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு தெலங்கானா மற்றும் அதையொட்டிய விதர்பா பகுதிகளில் நிலவியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய விதர்பா மற்றும் அதையொட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (செப். 15) ஓரிரு இடங்களிலும், நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மாவட்டங்களிலும், 17-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், 18-ம் தேதி சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 19-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை பாரிமுனையில் 11 செ.மீ. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, சென்னை கொளத்தூரில் 9 செ.மீ. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 8 செ.மீ. பெரம்பூர், வில்லிவாக்கத்தில் 7 செ.மீ. தண்டையார்பேட்டை, ஆட்சியர் அலுவலகம், விம்கோநகர், கொரட்டூர், காசிமேடு, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.